Friday, May 21, 2010

காஃபி குடித்தல்!




நான் இராமகிருஷ்ணா மிஷன் ஹை ஸ்கூலில் படித்தபோது நடந்த சம்பவம் இது! இன்றைக்கும் இது மறக்கவில்லை! எப்போதும் மறக்காது என்றும் நினைக்கிறேன் ஏனென்றால் அப்படியாப்பட்ட சப்ஜக்ட் இது!

நான் ஒன்பதாவது படிக்கும்போது, தமிழ் வாத்தியார் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார்! அவர் பெயர் அம்மையப்பன்! அப்போது அவருக்கு நாற்பது சொச்சங்கள் இருக்கும்! மற்ற வாத்தியார்களைப் போல
சிங்கியடித்துக்கொண்டு இருக்கவில்லை அவர்! சரியான பணக்காரர் என்று சொல்லிக்கொள்வார்கள்! தினமும் சஃபாரி டிரஸ்ஸில்தான் வருவார் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள்! ஜாலியாக பேசுவார்!
மாணவர்களை திட்டுவாரே தவிர, அடிக்கமாட்டார்!

சரி, விஷயத்துக்கு வருவோம்! நான் ஒன்பதாவது படிக்கையில், ஒரு க்வார்ட்டர்லி லீவில், அவர் ஒரு மாதம் லீவு எடுத்துக்கொண்டு சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஜப்பான் போன்ற நாடுகளை சுற்றிப் பார்க்க போயிருந்தார்!

ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு நாள் எங்கள் கிளாசுக்கு தமிழ் வகுப்பு எடுக்கவந்தார்! ஃபாரின் போய்விட்டு வந்த பிறகு அவரிடம் நிறையவே மாற்றம்! கைகளில் எக்ஸ்ட்ரா மோதிரங்கள், பிரேஸ்லெட், மற்றும் தடியான தங்கச் சங்கிலி! செண்ட் அடித்திருந்தார் என்று சொல்லவே வேண்டாம்!

அவர்தான் ஜாலி பேர்வழியாயிற்றே! கிளாஸில் ஒருவன் சும்மா இல்லாமல், “சார்! பாடம் அப்புறம் இருக்கட்டும் சார்! மொதல்ல உங்க பயண அனுபவத்தை சொல்லுங்க சார்!” என்று கேட்டான்!

அவ்வளவுதான்! மடை திறந்த மாதிரி சுமார் ஒரு மணி நேரத்துக்கு, எங்கேல்லாம் போனேன் என்று சொன்னார்!

சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்! பழக்க வழக்கம், கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்! திடீரென்று, ஜப்பானைப் பற்றி
ரொம்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்!

“அங்கெல்லாம் டி.வி., ரேடியோ, டேப் ரிக்கார்டர் எல்லாத்தையும் தெருவுல போட்டு கூறு கட்டி விக்குறான்! பாக்கவே நல்லா இருந்தது!” என்றெல்லாம் அளந்து கொண்டிருந்தார்! அப்படியே பேச்சு ஒரு விஷயத்துக்கு போய்விட்டது! அதான், செக்ஸ்!

“ஜப்பான்ல ஒரு வீதி பூராவும் அந்த மாதிரி பொம்பளைங்க இருக்காங்க! வேணுங்கறவன் அங்கே போகலாம்!” என்றெல்லாம் சொல்லிவிட்டு,
பூடகமாக, “ஜப்பானியர்களை பொறுத்தவரை கற்பு என்பது காஃபி குடிப்பது மாதிரி! அவங்களை பொருத்தவரை அது சாதாரணமான விஷயம்! எப்போ வேணும்னாலும் குடிப்பாங்க!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்!

அப்போது, என் கிளாஸில் இருந்த விடாக்கண்டன் ஒரு கேள்வி கேட்டானே பாக்கலாம். “அப்போ, நீங்க எத்தனை காஃபி சார் குடிச்சீங்க?”!

அவனுக்கு அடி கெடச்சுதுன்னு நீங்க நெனெச்சாக்க தப்பு!

அந்த கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் சூப்பர். இன்னைக்கும் நெனைவுல இருக்கு!

“நான் காஃபி குடிக்கறதில்ல! டீ தான் குடிப்பேன்”!