Monday, November 19, 2007

தி. நகர்.

நாங்கள் தி. நகரில் வாழ்ந்த காலம் மறக்க முடியாத ஒன்று. ஹார்ட் டிஸ்க்கில் போட்டு வைத்த ஒரு ஃபைல் காலம் காலமாக அழியாமல் இருக்கும். ஆனால் என் தி. நகர் வாழ்க்கை என்னுடய Heart Disk'ல் போட்டு வைத்தது, எப்படி போகும் என்று சொல்லுங்கள்? அதுவும் என் மூன்று வயதில் இருந்து பன்னிரண்டு வயது வரை நடந்த சம்பவங்கள் என் மனதிலேயே நிற்கிறது.

நாங்கள் குடியிருந்த இடம், ஒரு பெரிய வீட்டின் பின்புறம் இருந்த நான்கு குட்டி போர்ஷன்களில் ஒன்று. அந்த 'பெரிய வீடு' (நிஜமாகவே பெரிய வீடுதான அது) இருந்த இடம், பனகல் பார்க்கின் எதிர்ப்புறம். சந்தேகமாக இருந்தால், 'சரவணா ஸ்டோர்ஸின்' பிரம்மாண்டமான கடைக்குப் போய் பாருங்கள். அது இருந்த இடம்தான் அந்த 'பெரிய வீடு'.

Anyway, அந்த நான்கு போர்ஷன்களில், நாங்கள், மற்றும் மாடி வீட்டில் இருந்த பேச்சிலர் மாமாதான் தமிழர்கள். மற்ற இரு போர்ஷன்கள் மற்றும் 'பெரிய வீட்டுக்காரர்கள்' எல்லாரும் மார்வடிகள்.. மார்வாடிகள் என்றால், சினிமாவில் வருகிற மாதிரியான "நிம்பள்க்கி நம்பள்"என்று பேசுவார்கள் என்று நினைக்காதீர்கள்.. நன்றாக பக்கா தமிழில் பேசுவார்கள். ஒரு சிலர் தமிழ் தினசரிகளான 'தினத்தந்தி', 'தினமணி' போன்ற பத்திரிக்கைகளை படித்து விட்டு தமிழ்நாட்டு அரசியலை தமிழில் ஒரு பதம் பார்ப்பார்கள்.

எனக்கு எதிர் வீட்டு போர்ஷனில் குடியிருந்த டிங்கு தான் என் age group-ஐ சேர்ந்தவன்.. மற்ற எல்லோரும் என்னை விட பெரியவர்கள்.ஆனால், அந்த டிங்கு என்னை விட சரியான மக்கு.. விளையாட்டிலும் சரி, படிப்பிலும் சரி.. அதனால் என்னை நெருங்குவதற்க்கே அலறுவான். மற்ற பசங்கள் எல்லாரும் சராசரி தான் என்பதால், வெறும் பேச்சோடு சரி.. அவர்களிடம் பேசிப்பேசியே எனக்கு மார்வாடி பாஷையும் ஹிந்தியும் நன்றாக பேசத் தெரிந்தது, அந்த வயதில். என் அப்பா கூட திட்டுவார். "ஏண்டா எப்பவும் ஹிந்தியிலேயே பேசறே எப்பவும்? தமிழிலே பேசு" என்று.. ஏனென்றால், பாவம் அவருக்கு மார்வாடி பாஷையும் ஹிந்தியும் புரியாது!! அதுவும், ஹிந்தியும் மார்வாடி பாஷையும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டிருந்தார் சாகும்வரை!

இந்த கதியில், எனக்கு இருந்த ஒரே நண்பன் அல்லது எனக்கு இன்ஸ்பைரேஷனாக வந்தவன், பப்லூ என்ற 'பெரிய வீட்டுக்கார' பையன். அவன் என்னை விட ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். பெரும் பணக்காரன் என்ற பந்தா சற்றும் இல்லாதவன்.. சில சமயங்களில் எங்கள் வீட்டிற்க்கு வந்து ரசம் குடித்து விட்டு போவான் (அது அவன் அம்மாவிற்க்கோ அல்லது அப்பாவிற்க்கோ தெரிந்து இருந்தால் அவனை கொலை கூட செய்து இருப்பார்கள்).

அவனுக்கு எப்படியோ நான் நன்றாக படிப்பது தெரிந்து விட்டது (என் அக்கா அல்லது என் அம்மா, இருவரில் ஒருவர் தான் என்னைப் பற்றிபோட்டுக்கொடுது இருக்க வேண்டும்). அதில் இருந்து, Quarterly/Half-yearly/Annual எக்ஸாம் சமயங்களில் அவ்வப்போது வந்து விசாரித்து விட்டுப்போவான், நான் படிக்கிறேனா இல்லையா என்று! இதெல்லாம் போதாது என்றும, ஸ்ம்மர் ஹாலிடேக்களில் காலை ஏழு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி, கிரிக்கெட் கற்று கொடுப்பான். எப்படி?

அவன் இருந்த 'பெரிய' வீட்டைச்சுற்றி கான்கிரீட் ஸ்லாப்கள் போடப்பட்டிருக்கும். அதில் ஸ்டம்ப் நடுவதற்க்கு ஏற்றவாறு மூன்று குழிகளை தோண்டி, ஸ்டம்பை நட்டு, க்ரீஸை சுற்றி கார்ப்பெட் போட்டு, எனக்கு பவுலிங் சொல்லி கொடுப்பான். நானும் சளைக்காமல்பவுலிங் போடுவேன். அவனுக்கு ஒரு Profession Cricket Coach சொல்லி கொடுத்த Technique எல்லாம் எனக்கும் சொல்லி கொடுப்பான்.முதல் இரண்டு பந்துகள் Out Swing. அடுத்த இரண்டு பந்துகள் In Swing. ஐந்தாவது பந்து Straight Ball. ஆறாவது பந்து எனக்கு இஷ்டப்படியான வகை. நம்புங்கள், நான் எட்டாவது படிக்கும்போது, நான் படித்த ராமகிருஷ்ணா மிஷன் ஹை ஸ்கூலில் மீடியம் பேஸ் பவுலராக செலக்ட் ஆனேன். (ராமகிருஷ்ணா பள்ளிகளில் இருக்கும் பாலிடிக்ஸ் பற்றி ஒரு புத்தகம் போட்டு சுஜாதாவை ஒரு முன்னுரை போடச்சொன்னால், டக்கராக விற்பனை ஆகும். குமுதத்தில் வரும் 'நீங்களும் பணம் பண்ணலாம்' பகுதியில் ஃபோட்டோ கூட வரும்.).

இதெல்லாம் போதாது என்று, மத்தியானம் லன்ச் முடித்த பிறகு, அவனுக்கு என்று இருக்கும் ஒரு பெரிய அறையில் (கெஸ்ட் ஹவுஸ் என்றே சொல்லலாம்) எனக்கு ராபின்சன் க்ரூஸோ, டாம் சாயர், போன்ற புத்தகங்களை படிக்க வைப்பான். இல்லாவிட்டால், 'Do it Yourself Electronic Gadgets' போன்ற ஐட்டங்களை வைத்துக் கொண்டு, ரேடியோ அல்லது டெலிபோன் அல்லது இரயில் கிராஸ்ஸிங் சர்க்யூட் அல்லது இண்ட்க்ஷன் மோட்டார் போன்றவைகளை 'படங்களை பார்த்து செய்' என்பான். மொத்தத்தில், என்னுடய இரண்டு மூன்று Annual Leave-களை உருப்படியாக கடக்க வைத்தான்.

அவன் சொல்லிக்கொடுத்ததில் எல்லாவற்றையும் விட்டு விட்டு Electronic Gadjets-களை மட்டும் பிடித்துக் கொண்டுவிட்டேன். இப்போது பார்த்தீர்களானால், என் வீடு ஒரு சிறிய எலக்ட்ரானிக் கடை போல இருக்கும். அதற்கு இன்ஸ்பைரேஷன் அந்த பப்லூதான்.

அதற்க்குப் பிறகு, என்னுடைய பன்னிரண்டாவது வயதில், தி. நகரில் இருந்து நங்கநல்லூருக்கு குடி போனோம். அப்படி போகும் முன், என்னிடம், டெலிபோன் ரிசீவர்கள் ரெண்டு (பழைய காலத்து பீங்கான் ரிசீவர்கள்), நான்கைந்து டெலிபோன் வயர்கள், D.C. மோட்டார்கள் இரண்டு என்று
பல ஐட்டங்களை கொடுத்து அனுப்பினான். அதெல்லாம், நாலைந்து வருடங்கள் வைத்துருந்து அப்பா திட்டியதால் குப்பையில் போட்டேன்.
பல வருடங்கள் கழித்து, அவனை ஒருமுறை சந்தித்தேன் (ஒரு கல்யாணத்தில் என்று நினைவு). நான் என்ன படிக்கிறேன், எங்கு படிக்கிறேன்,எப்படி படிக்கிறேன் என்று விசாரித்தான். நான் அவனிடம் கேட்டேன் எங்கு படிக்கிறான் என்று! அதற்கு அவன், தான் B.Com. படித்து விட்டுகுடும்ப Business-ஐ கவனிப்பதாகவும் சொன்னான். எனக்கு ஷாக்.. என்னை நன்றாக படிக்க சொல்வானே, அவன் போய் பி. காம்.உடன் நிறுத்தி விட்டானே என்று.. அப்போதுதான் எனக்கும் தோன்றியது. அவன் எப்படி படிப்பான் என்று நான் அவனிடம் கேட்டதும் இல்லை, அவனும் சொன்னது இல்லை. So, எனக்குள் ஒரு Obvious கேள்வி... அதையும் அவனிடம் கேட்டேன். "அடப்பாவி... என்னை படி, படின்னு போட்டுஉசிரை வாங்குவே... நீ மட்டும் பி.காமுடன் நிறுத்திவிட்டாயா?". அதற்கு அவன் சொன்னான்.. "நான் ஒழுங்கா படிக்கல.. நீயாவது நல்லா படிக்கணும்னுதான் அப்படி செஞ்சேன்".. அதை கேட்டு, நான் கல்லாய் சமைந்தேன். ஒரு சில நிமிஷங்களுக்கு.

இப்போது அவன் தனியாக Business செய்வதாகவும், தன் தாய் தந்தையரை விட்டு பிரிந்து விட்டதாகவும் (அவர்கள் community-இல் அதுநடக்க முடியாத ஒன்று. ஜார்ஜ் புஷ் இங்கிலீஷ் வார்த்தைகளை ஒழுங்காக pronounce செய்வது போன்ற ஒன்று) கேள்விப்பட்டேன். அவனைப் பார்த்தால் ஒன்று கேட்கவேண்டும்.. "எங்களுக்காக பல முறை உன் அப்பா அம்மாவிடம் அடி வாங்கினாயாமே நீ?"

Monday, November 12, 2007

திருடனை பார்த்து இருக்கிறீர்களா?

என்னுடைய பன்னிரெண்டாவது வயதில் நாங்கள், தி. நகரில் இருந்து நங்கநல்லூருக்கு குடி பெயர்ந்தோம்.. அப்போதெல்லாம் நங்கநல்லூரில் தெருவுக்கு பத்து வீடுகள் இருந்தால் அதிகம்... அதிலும், ஒவ்வொரு வீடும் இரண்டு கிரவுண்ட் லே அவுட்டில் இருக்கும்.. இதனால், வீட்டுக்கு நாலு தென்னை மரம், நாலு மாமரம், பத்து வாழை மரம் வீதம் இருக்கும்... இதில் beauty என்னவென்றால், பல வீடுகளில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே பயிரிட்டு விடுவார்கள். அப்போதெல்லாம் ("அந்த காலத்தில் எல்லாம்" என்று நான் என்னுடைய கண்ணாடியை கழட்டுவேன் என்று நினைக்காதீர்கள்... இன்னும் அந்த வேளை வரவில்லை..) தண்ணிக்கு பஞ்ஜம் இல்லை என்று நான் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா?

அந்த சிறு வயதில், நான் கேள்விப்பட்டவரை, திருடன் என்றால், உடம்பு பூரா கரியை பூசிக்கொண்டு, ஒரு அரை டிராயர் போட்டுக்கோண்டு இருப்பான் என்று நினைத்துக்கோண்டு இருப்பேன் (நாங்கள் தி. நகரில் இருக்கும்போது திருட்டு பயம் இருந்ததில்லை அதனால் திருடனை visualize செய்து பார்ப்பதை விட ஒரு வேளை திருடனை பார்த்து விடக்கூடாது என்கிற பயத்தினால் வந்த கற்பனையோ என்னவோ). தி. நகரில் இருக்கும்போது பார்த்த traffic இரைச்சலை ந.நல்லூரில் பார்க்க முடியாததால், இரவு ஒன்பது மணிக்கு மேல் இருக்கும் இருட்டைப்பார்த்தும் பயம் வந்தது உண்டு...

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை, மாடி வீட்டு சேது (என்னை விட மூன்று வயது பெரியவன்) பம்பரம் விளையாடிக்கொண்டிருந்த என்னிடம் பக்கத்து தெருவில் மாங்காய் திருடிய ஒருவனை கட்டிப் போட்டு இருப்பதாகவும், ஒரே கூட்டமாக இருப்பதாகவும் சொன்னான். எனக்கோ இங்கேயே உள்ளூர உதறல். ஆனாலும், ஒரு curiosity. போய்த்தான் பார்ப்போமே.. நாம் பார்த்ததே இல்லை.. அப்புறம் எப்போதான் சான்ஸ் கிடைக்கும்? திருடனை கட்டி வேறு போட்டிருக்கிறார்கள் என்றானே சேது. அவனால் நமக்கு ஒரு danger-ம் இருக்காது. அதனால், நாம் போய் பார்த்துவிடுவோம்.. At least, தூரத்தில் இருந்த்தாவது போய் பார்ப்போம் என்று, அப்படியே போட்டபடியே (பம்பரமும் சாட்டையும் காணாமல் போனது வேறு கதை) ஓடினேன்.

அந்த தெருவில் நுழைந்த நான் தெரு முனை வரைக்கும் ஓடினேன்.. எங்கேயாவது கூட்டம் தென் படுகிறதா என்று பார்த்தேன்... ஹ்ம்..ஹூம்.. No திருடன்.... அடப்பாவி சேது போய் சொன்னாயா என்று ஓடிப்போய் கேட்கலாம் என்று தோன்றியது. அப்படி கேட்பதற்க்கு பதிலாக, இன்னோரு முறை அந்த தெருவை நோட்டம் விட்டு double confirm செய்து விடலாம் என்று, இன்னொரு முறை தெருவுக்குள் ஓடினேன்.... இப்போதும் காணோம் திருடனை... சரி போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விட்டது என்று முடிவு செய்து வீட்டிற்க்கு ஓடினேன்.. அப்போது திருடனை பார்க்க முடியாமல் ரொம்ப சோகமாக அம்மாவிடம் போய் சொன்னேன்.. அவளும் விழுந்து விழுந்து சிரித்தாள். "அடுத்த வாட்டி இப்படி எங்கியாவது திருடனை புடிப்பா... அப்ப பாத்துக்கலாம்"...

அதற்க்கப்புறம் பல முறை திருடனைப் பார்த்து இருக்கிறேன்.. பல முறை திருடனைப் பிடித்தும் இருக்கிறேன்... ஆனால் நான் நினைத்தைதப்போல் ஒருமுறையும் திருடன் இருந்ததில்லை.

Modern Day திருடர்களை அந்த மாதிரி கற்பனை செய்து பார்த்தேன் ஒருமுறை.. சிரிப்புத்தான் வந்தது....

அது சரி, திருடனை எப்படி Define செய்வது?