Thursday, February 14, 2008

தமிழனுக்கு ஏன் இந்த நிலை?

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பாள் அவ்வைப்பாட்டி! தமிழர்கள் விஷயத்தில், அது சென்ற இடமெல்லாம் செருப்பு என்று ஆகி வருகிறது! கற்றவர் கல்லாதவர் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்!

ஒரு காலத்தில் - தமிழ்நாட்டில் இருக்கும்போது - தமிழர்களுக்கு ஏதாவது அவமரியாதை என்று படிக்கும்போது நிஜமாகவே நெஞ்சு துடிக்கும்! "துடிக்குது புஜம்" என்று விக்ரம் படத்தில் கமல் பாடியதுபோல் துடிக்கும்! பிறகு அமெரிக்காவிற்க்கு வந்த பிறகும் சில காலம் துடித்துக்கொண்டிருந்தது! இப்போதெல்லாம் அது போயே போச்!

ஒரு காலத்தில் நான் தமிழ்நாட்டில் இருந்தபோது அங்கு படிக்கும் பத்திரிக்கைகளாலும், ஊடகங்களாலும், என்னை தமிழ்வெறி ஒரு மாதிரியாக ஆட்கொண்டிருந்தது என்றே சொல்லலாம். இப்போது பல நாட்டு சரித்திரங்கள், நடப்புகள், அரசியல்,நாகரீகம் போன்றவைகளை படித்தும் அதை தாண்டி வந்தும் இருப்பதால், கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது!

சரி, அதுக்குன்னு தமிழன் "அடி" வாங்குவதை படிக்கும்போதெல்லாம், இப்படியே கவலை இல்லாமல் இருக்காமலும் இருக்கமுடியவில்லை! அதனால், நானாகவே சில விஷயங்களை யோசித்து, அந்த விஷயங்களால் என்னை தயார்படுத்திக்கொண்டு இருக்கிறேன்! முடிந்தால், நீங்களும் படித்து தயார்படுத்திக்கொள்ள முடியுமான்னு யோசிங்களேன்:

தமிழனுக்கு ஏன் இந்த கதி?

1. முதலில் யார் தமிழன் என்றே பாகுபடுத்தாத ஒரு குணம்! ஒரு விதத்தில் பார்த்தால், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்/தமிழன் என்று சொல்லுவோம்! ஆனால், அப்படி வந்தவரையே தன்னை ஆள வைக்கும் புத்தியும் அவனுக்குத் தான் உண்டு! வேறு எந்த மாநிலத்திலும் ஏன் எந்த நாட்டிலேயும் இந்த மாதிரியான ஒரு "அம்மாஞ்சித்தனம்" யாருக்கும் இல்லை!

உதாரணத்திற்க்கு, கர்நாடகாவில் இருக்கும் தமிழன் கன்னடத்திலேயே பேசுவான்! மும்பையில் வேலை பார்க்கும் தமிழன் டக்கராக ஹிந்தியில்பேசுவான்! அப்படி இருந்தால்தான் அவனையும் மதிப்பார்கள்! அதேபோல், அந்தந்த மாநில/நாட்டு பழக்கவழக்கங்களையும் கடைபிடிப்பான் ("ஊரோடு ஒத்து ஒத்து வாழ்வது")! ஆனால், தமிழ்நாட்டில் குடிவரும் மற்றவர்களிடம் அதை எதிர்பார்க்கமாட்டான்! மாறாக அவர்களை தலையில் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுவான் (வீட்டில் தெலுங்கில் மாட்லாடும் விஜயகாந்தில் ஆரம்பித்து, கடைகளில் "நிம்பள்க்கி நம்பள்" என்று பேசும் சேட்டு வரை).

சரியான ஒரு definition இல்லாததால், தமிழுக்கே தமிழ்நாட்டில் மரியாதை இல்லை! பிறகு எப்படி தமிழனுக்கு மரியாதை? தமிழ் நாட்டிலேயே கிடைக்காதது பிறகு வெளிமாநிலங்களில்/வெளிநாட்டில் எப்படி கிடைக்கும்!

2. சக தமிழனை நம்பாத ஒரு குணம்! ஊரில் செட்டியார் வைத்திருக்கும் அடகு கடைக்குப் போகாமல், ரெண்டு ஊர் தள்ளி கடை வைத்திருக்கும் "சேட்டை" நம்புவான்! அதே போல், ஒரு பொருளை விற்கும்போது, யாருக்கு கொடுத்தால் நல்லது என்று பாகுபாடு இல்லாமல் undeserving ஆசாமிகளுக்கு கொடுப்பான்! இதை பொருளில் ஆரம்பித்து, ஆட்சியை ஒப்படைப்பதுவரை கண்ணியம் தவறாமல் செய்வான்!

3. எதெற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவது! சாம்பாரில் காரம் கம்மியாக இருப்பதில் ஆரம்பித்து தன் தாயை சந்தேகப்படுத்திவிட்டான் என்பது வரை! அறிவுபூர்வமாக யோசிக்கிறேன் பேர்வழி என்று உணர்ச்சி பூர்வமாக ஏதாவது சொல்லிவிட்டோ அல்லது செய்துவிட்டோ about turn அடிப்பது
தமிழர்களுக்கு கை வந்த கலை! இந்த "உணர்ச்சிபூர்வ" விஷயத்தில் நம்பர் ஒன் "தமிழ் மொழி". அவன் வீட்டில் தமிழ் பேசுபவனாகவே இருக்க
மாட்டான்! ஆனால் "தமிளுக்கு ஆபத்து, தமிளுக்கு ஆபத்து" என்று எவனோ கூவுவான்! இந்த கூத்தில் பாதிக்கப்படுவது நிஜத்தமிழந்தான்!

4. தமிழை ஒழுங்காக பேசாத ஒரு "போங்கு" குணம்! படிக்காதவர்கள்தாம் இப்படியென்றால், படித்தவர்களும் இப்படித்தான்! கேட்டால்அது ஒரு "ஸ்டைல் மச்சி" என்ற ஒரு பதில்! தமிழ் பாட்டில் ஆங்கிலம் வந்தால் தவறு இல்லை (என்னைப்பொறுத்தவரை)! ஆனால் தமிழையே ஆங்கிலத்தனமான உச்சரிப்புதான் தேவை இல்லாத ஒன்று! இதெற்கெல்லாம் மூலாதாரம் A.S. திலீப் குமார் a.k.a."அல்லாஹ் ரக்கா ரஹமான்" தான் என்பேன்! அவர் படித்த பள்ளிக்கூடம் பத்மா சேஷாத்ரி! அங்கே படிக்கும் மாணவர்கள் பேசும் தமிழைத்தான் அவர் தன் பாடல்களில் உபயோகப்படுத்துகிறார்! ("சண்டே சர்ச்க்கு போவணும்! வோர்க் இருக்கு" போன்ற சொற்றொடர்கள் அங்கே பிரபலம்)! தன் மொழியையே உதாசீனப்படுத்தும் ஒருவனை மற்றவர்கள் உதாசீனப்படுத்துவதில் என்ன ஆச்சர்யம் வந்து விடப்போகிறது?

5. சுய தம்பட்டம்! அதிலும் ஒன்றை ஆயிரமாக சொல்லுவது தமிழர்களுக்கு கை வந்த கலை! "ஆயிரம் யானைகளை கொன்றால் பரணி"! அப்படியென்றால் சோழநாடு பூராவும் யானைகள் தான் உலாத்திக்கொண்டிருந்ததா? இந்த சொற்றொடருக்கு வேறொரு அர்த்தம் இருக்குமோ என்னவோ, என்னைப் பொருத்தவரை இது கதை கட்டுவதற்கு உபயோகப்படும் ஒரு வாக்கியம்! சாதாரண விஷயத்துக்கு ஊரையே கூட்டுவது முதற்கொண்டு ஆரம்பிக்கும் தம்பட்டம்!

(மேலும் வரும்!!!!!)