Tuesday, August 11, 2009

கமல் 50.....

























இன்று கமல் திரையுலகுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிறது! கமலின் நான்ஸ்டாப் இன்னிங்க்ஸுக்கு என்ன காரணம் என்று யோசிக்கவே தேவையில்லை! கீழே எழுதியிருக்கும் நிகழ்ச்சியை படித்தாலே கமலின் வெற்றிக்கு காரணத்தை புரிந்து கொள்வீர்கள்!

என் மாமனார் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நாடகத்தில் நடித்திருக்கிறார்! எண்பதுகளில் தூர்தர்ஷன் நாடகங்களிலும் நடித்திருக்கிறார்! இத்தனைக்கும் அவர் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் நல்ல ஒரு ஸ்டெனோ வேலையில் இருக்கும்போது பார்ட் டைமாக நடித்தது!




சுமார் 30-35 ஆண்டுகாலம் ஒரு துறையில் இருந்திருக்கிறாரென்றால் அனுபவத்திற்கு என்ன குறைச்சல் என்று நீங்கள் கேட்கலாம்! இல்லை நீங்கள் கேட்காவிட்டாலும் நான் விடுவதாக இல்லை! பின்னே? அவனவன் ஒரு வருஷமோ ஒன்றரை வருஷமோ ஜாவா கோவா என்று ஏதேதோ ஜல்லியடித்துவிட்டு அமெரிக்காவிற்கோ அல்லது பன்னாடை sorry பன்னாட்டு கம்பெனிக்கோ வேலைக்கு போகிறார்கள்! அப்படி போனவர்களே கும்மி அடிக்கும்போது நம்மாளுக்குஎன்ன குறைச்சல்?

ஓ.கே.! முதலில் அவர் கூட நடித்தவர்களைப் பற்றி கொஞ்சம்!அறுபதுகளில் அவர் பல நாடகங்களில் நடித்திருந்தாலும், வி.எஸ். ராகவனின் ட்ரூப்பில்தான் நிறைய குப்பைகொட்டியிருக்கிறார்! (பல படங்களில் ஜட்ஜாக வந்து "சட்டத்த எப்படி கூண்டுல நிறுத்தமுடியும்? What are you talking?" என்று ஹீரோக்களைப் பார்த்து வசனம் பேசுவாரே, அவரேதான்!)

இவர் கூட நடித்தவர்களில் முக்கியமானவர் கமல்! அட, நம்ம கமல் ஹாசன் தான்! அப்போது கமலுக்கு 14-15 வயது இருக்கும்! வருஷம் 68-69 என்று வைத்துக்கொள்ளுங்களேன்! கமலுக்கு அப்படி என்ன நாடகத்தின்மேல் மோகமோ இல்லை நன்றாக படிக்கச்சொல்லி வற்புறுத்துவார்களோ என்று தெரியவில்லை! படிக்கக்கூட போகாமல் நித்தம் டிராமா டிராமா என்று அலைவானாம் ஸாரி அலைவாராம்!கமல் என்ன என் மாமனார் மாதிரி சும்மாவா? அப்பா சேர்த்துவைத்த சொத்து! போதாக்குறைக்கு அண்ணன்கள் வேறு! குடும்பமே வக்கீல் குடும்பமாதலால் பயங்கர வசதி! தினமும் டிராமாவுக்கோ ரிஹர்சலுக்கோ காரில்தான் வருவாராம்! அதுவும் எப்படி? தன் அண்ணன்கள் யாராவது ஒருவர் தினமும் காரில்தான் கொண்டுவிடுவார்களாம்!



Anyway, காரில் வந்தாலும் கமல் அலட்டமாட்டாராம்! ஏதாவது சிறு சிறு வேலைகள் செய்வாராம் சக நடிகர்களுக்கு!பலமுறை கமலின் அண்ணன் சந்திரஹாசன் கமலை கொண்டுவிடும்போதெல்லாம் சக நடிகர்களிடம் - என் மாமனார் உட்பட -சொல்வாராம் "சார்! இவன் படிக்காம டிராமா டிராமான்னு அலையறான்! நீங்கதான் இவனுக்கு புத்திமதி சொல்லி படிக்க சொல்லணும். இல்லன்னா உருப்படாம போயிடப்போறான்".அவர்களும் சொல்வார்களாம்! கமல் அதையெல்லாம் கேட்டுக்கொள்ளாமல் இருந்துவிடுவாராம்!

ஒரு முறை என் மாமனார் ஏதோ இப்படி சொல்லப்போக, கமல் ஒரு response கொடுத்தாராம் "மாமா! நீங்களெல்லாம் என்ன ரொம்ப கிண்டல் பண்றீங்க! ஒரு நாள்இல்லை ஒரு நாள் நீங்க சொல்ற இந்த கமலஹாசன் 'ஆல் இண்டியா ஃபேமஸ் கமல் ஹாசன்' (ல்-இல்லில் ஒரு அழுத்தம்) ஆகப்போறேன் பாருங்க! அப்ப சொல்வீங்க".

இப்போது சொல்லுங்கள்! இன்னும் ஒரு ஐம்பது தாங்குவாரா மாட்டாரா கமல்?