Friday, September 4, 2009

ஷங்கர் படத்தில் ஷங்கர்!



என்னடா தலைப்பிலேயே பினாத்தறான்னு நெனெச்சிக்காதீங்க! நம்ம ஷங்கர் இருக்காரே, அவரு தன்னோட படத்துல எப்படியோ நடிச்சிடறாரு!

பொதுவா கதாசிரியரோ இல்லை டைரக்டரோ, தன்னை ஒரு நடுநிலையாளனாகவோ அல்லது ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில்/கோணத்தில்தான் கதை சொல்லமுடியும்! இல்லை, ஒரு கதையை மூன்றாம் மனிதன் நோக்கில் (பார்வையில்) காட்டமுடியும். இதைத்தான் பாயிண்ட் ஆஃப் வ்யூ (Point of View) என்று சொல்லி விகடனிலும் குமுதத்திலும் நம்ம டைரக்டர்கள் ஜல்லியடிப்பார்கள்!

அதே சமயத்தில் ”கெட்டவன் சாவான் நல்லவன் வாழ்வான்” அப்படீன்னும் poetic justic முறையில் வில்லனுக்கு தண்டனை கொடுப்பார்கள்! அதாவது வேலால் வயிறு கிழிந்து சாவது இல்லை தலையறுபட்டு சாவது என்று! இதில் இன்னொரு வகை, தன் இன்னொரு முகத்தை (alter ego) தன் படத்தில் ஒட்டாத ஒரு கேரக்டராக காண்பித்து அவனை வைத்து கதையை நகர்த்துவார்கள்! இல்லையெனில், கருத்து சொல்ல வைப்பார்கள்! தள விஜயின் தந்தை எஸ். ஏ. சி. படத்தில் கிழிந்த கோட்டு போட்டு லூசுத்தனமாக “ஆண்டிப் பண்டாரம்” ரேஞ்சில் தத்துப்பித்துவம் சொல்வது எஸ். ஏ. சி. தான்!

(இப்படித்தான் எஸ் வி. சேகர் நாடகமான் “வால் பையன்” நாடகத்தில் ஒவ்வொரு சீன் முடியும் முன் ஒரு ஆசாமி (ஜிப்பா, ஜோல்னா பை சகிதம்) வந்து கருத்து சொல்லிவிட்டுப் போவார் (ஏழுக்கு பக்கத்தில் ஆறு போட்டால் எழுபத்தாறு! அதையே ஆறுக்கு பக்கத்தில் ஏழு போட்டால் அறுபத்தேழு! அதனால வாழ்க்கையில் எப்பவும் கேர்ஃபுல்லா இருக்கணும்)! நாடகத்தில் கடைசியில், ஒருவர் சேகரிடம் கேட்பார்! “யாரு அந்த ஆளு? ஒவ்வொரு சீன்லேயும் வந்து கருத்து சொல்லிட்டுப் போறாரு” என்று! அதற்கு சேகர் “ஆமாய்யா! கே. பாலசந்தர் ஒரு பேட்டில சேகர் டிராமாவில் கருத்து சொல்றதில்லை அப்படீன்னு சொல்லியிருந்தாரு! அதுக்காகத்தான் நாங்க கருத்து சொல்றதுக்கு ஒரு ஆள போட்டிருக்கோம்” என்பார்! இதைக் கேள்விப்பட்ட கே.பி.க்கு பி.பி. எகிறியிருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை!)

Okay, back to I was saying.... காதலன் படம் வெளிவந்த சமயத்தில் டைரக்டர் ஷங்கர் டி.வி.யில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்! கமலைப் போல எவனுக்குமே புரியாத லெவலில் பேசியிருந்தார்! அதில் ஒன்று மட்டும் தெரிந்தது! ஷங்கர் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார் என்று! முக்கியமாக நன்றாக படித்தும் தனக்கு வசதி இல்லாததால் மேலே படிக்க வசதி இல்லாத விஷயத்தை சொல்லியிருப்பார்! அதை தன் படத்தில் காண்பிப்பது மட்டும் அல்லாமல், தன்னையே உருவகப்படுத்தி சில கதாபாத்திரங்களை காட்டியிருப்பார்!

ஜெண்டில்மேன்:

கிச்சாவிடம் (அர்ஜுன்) ஒரு பையன் வந்து முறுக்கு விற்பதற்கு சான்ஸ் கேட்பான்! கவுண்டமணி கேட்ட கேள்விக்கு பதிலாக கள்ள பூணூலை காண்பித்த்து “இதையாவது போட்டுட்டுபோய் விக்கறேன் சார்” என்று அழுதுகொண்டே சொல்லி கிச்சாவின் மனதைக் கரைப்பான்! அந்தப் பையன் தான் ஷங்கர், வேறு ஒரு உருவத்தில்! நல்லா படிச்சாலும் படிக்க வசதி இல்லை! அதனால பொய் சொல்றது தப்பில்லை என்பது ஷங்கரின் வாதம்!

காதலன்:

சொல்லவே தேவையில்லை! பிரவு தேவாதான் ஷங்கரின் உருவகம்! “தனக்கு தகுதி இல்லாததற்கு ஏன் ஆசைப்படவேண்டும்” என்று தந்தை (எஸ்.பி.பி.) கேட்டாலும் தான் நினைத்ததைஎப்படியாவது அடையும் சுபாவம்!

இந்தியன்:

சாட்சாத் இந்தியன் தாத்தாவே தான்! கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை இப்படி லஞ்சம் வாங்கி ஊழல் செய்து நாறடிக்கிறீர்களே என்று கேட்பது!

ஜீன்ஸ்:

மாதேஷ் கேரக்டர்! Green screen டெக்னிக்கில் தனக்கு உள்ள ஆர்வத்தை மாதேஷ் மூலமாக காண்பித்து இருப்பார்!

முதல்வன்:

இதில் புகழேந்தி ஒரு நாள் முதல்வராக இருந்துவிட்டு bad guys இடம் அடிவாங்கி வீட்டில் படுத்திருப்பார்! காலையில் எழுந்து பார்த்தால் வெளியில் ஒரே கூட்டம்! தன்னை அரசியலுக்கு வந்துவிடும்படி சொல்வார்கள்! ஆனால் அவர்கள் சொல்வதை கேட்காத புகழ், கால் இல்லமல் ஊனமாக இருக்கும் ஒருவர் சொல்லி முஷ்டியை உயர்த்துவார்! இதில் ஊனமாக வருபவர்தான் ஷங்கரின் உருவகம்!

பாய்ஸ்:

அந்த மணிகண்டன் கேரக்டர்! அடுத்தவர்களுக்கு ஐடியாவை அள்ளித்தந்துவிட்டு அவர்களை உயர்த்திவிட்டு தான் காணாமல் போவது! அது ஒருவகையான inferiority complex!

அந்நியன்:

சாட்சாத் அந்நியன் தான் ஷங்கர்! சமூகக் கொடுமைகளை நேரடியாக மக்களிடம் சொல்ல தைரியம் இல்லாமல் செல்லுலாய்டில் kick ass செய்வது போல காட்டியது!

சிவாஜி:

சந்தேகமே இல்லாமல் கடைசி சீனில் “ஐநூறு ரூபா! இன்னும் ரெண்டாயிரம் ரூபா கெடச்சா கேப்பிடேஷன் ஃபீயை சேத்துடலாம்” என்று சொல்லிக்கொண்டே சுமனின் கழுத்தை மிதிப்பானே ஒரு மாணவன்? அவன் தான் ஷங்கர்!
பி.கு.: மேலே உள்ள படத்தில் யார் ஷங்கர்னு கேக்காதீங்க, ப்ளீஸ்!