Wednesday, February 27, 2008

சுஜாதாவின் மரணம்

சுஜாதா மரணமடைந்துவிட்டார்!

எனக்குத் தெரிந்து 25 வருடங்களாக சுஜாதாவை படித்து வருகிறேன்!
அவர் சிறுகதைகளை படித்த அளவுக்கு அவர் நாவல்களை படித்ததில்லை! இருந்தாலும் அவரை விட அவர் எழுத்துக்கள் எனக்கு ரொம்பவே பரிச்சயம்!
ஆரம்ப காலத்து கணேஷ்-வசந்த்உரையாடல்களில் ஆரம்பித்து இன்றைய - மன்னிக்கவும் - நேற்று அவர் எழுதிய "கற்றதும் பெற்றதும்" வரை அவர்
எழுத்துகள் பரிச்சயம்!

சொல்லப்போனால், அவர் எழுத்துகள்தாம் எனக்கு தமிழை அறிமுகம் செய்தது
என்று கூட சொல்லலாம்! ஒரு கட்டத்தில் அவர் சிறுகதைகளைத் தான்
படிப்பேன்! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை விரிவுபடுத்தி பல எழுத்தாளர்களை படிக்கிறேன்! இருந்தாலும் First Love போல First Author
ஆகையால் கொஞ்சம் ஓர வஞ்சனை!

பல வருடங்களாக அமெரிக்காவில் இருப்பதால் எனக்கு தமிழ் படிக்கும் பழக்கம் விட்டுப் போகாமல் இருந்தாலும் தமிழில் எழுதும் பழக்கம் சுத்தமாக
விட்டுப் போனது! இன்று நான் தமிழில் வலைப்பூ எழுதும் அளவிற்கு
வந்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க சுஜாதா தான் காரணம்!

அவர் மரணம் என்னை ஏதோ செய்கிறது! ஏதோ அமானுஷ்யமாக இருக்கிற ஒரு உணர்வு! என்னை சுற்றி இருக்கும் விஷயங்கள் நகருவதைப் போலவும் நான் மட்டும் அப்படியே உறைந்து போனது போலவும் இருக்கிறது!

இனிமேல் அவர் இடத்தை நிரப்ப யார் வரப்போகிறார்கள்? அப்படியே வந்தாலும் அவர் எழுத்தில் இருக்கும் உணர்வுகளை கொண்டுவர முடியுமா?

அவர் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்!

Thursday, February 14, 2008

தமிழனுக்கு ஏன் இந்த நிலை?

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பாள் அவ்வைப்பாட்டி! தமிழர்கள் விஷயத்தில், அது சென்ற இடமெல்லாம் செருப்பு என்று ஆகி வருகிறது! கற்றவர் கல்லாதவர் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்!

ஒரு காலத்தில் - தமிழ்நாட்டில் இருக்கும்போது - தமிழர்களுக்கு ஏதாவது அவமரியாதை என்று படிக்கும்போது நிஜமாகவே நெஞ்சு துடிக்கும்! "துடிக்குது புஜம்" என்று விக்ரம் படத்தில் கமல் பாடியதுபோல் துடிக்கும்! பிறகு அமெரிக்காவிற்க்கு வந்த பிறகும் சில காலம் துடித்துக்கொண்டிருந்தது! இப்போதெல்லாம் அது போயே போச்!

ஒரு காலத்தில் நான் தமிழ்நாட்டில் இருந்தபோது அங்கு படிக்கும் பத்திரிக்கைகளாலும், ஊடகங்களாலும், என்னை தமிழ்வெறி ஒரு மாதிரியாக ஆட்கொண்டிருந்தது என்றே சொல்லலாம். இப்போது பல நாட்டு சரித்திரங்கள், நடப்புகள், அரசியல்,நாகரீகம் போன்றவைகளை படித்தும் அதை தாண்டி வந்தும் இருப்பதால், கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது!

சரி, அதுக்குன்னு தமிழன் "அடி" வாங்குவதை படிக்கும்போதெல்லாம், இப்படியே கவலை இல்லாமல் இருக்காமலும் இருக்கமுடியவில்லை! அதனால், நானாகவே சில விஷயங்களை யோசித்து, அந்த விஷயங்களால் என்னை தயார்படுத்திக்கொண்டு இருக்கிறேன்! முடிந்தால், நீங்களும் படித்து தயார்படுத்திக்கொள்ள முடியுமான்னு யோசிங்களேன்:

தமிழனுக்கு ஏன் இந்த கதி?

1. முதலில் யார் தமிழன் என்றே பாகுபடுத்தாத ஒரு குணம்! ஒரு விதத்தில் பார்த்தால், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்/தமிழன் என்று சொல்லுவோம்! ஆனால், அப்படி வந்தவரையே தன்னை ஆள வைக்கும் புத்தியும் அவனுக்குத் தான் உண்டு! வேறு எந்த மாநிலத்திலும் ஏன் எந்த நாட்டிலேயும் இந்த மாதிரியான ஒரு "அம்மாஞ்சித்தனம்" யாருக்கும் இல்லை!

உதாரணத்திற்க்கு, கர்நாடகாவில் இருக்கும் தமிழன் கன்னடத்திலேயே பேசுவான்! மும்பையில் வேலை பார்க்கும் தமிழன் டக்கராக ஹிந்தியில்பேசுவான்! அப்படி இருந்தால்தான் அவனையும் மதிப்பார்கள்! அதேபோல், அந்தந்த மாநில/நாட்டு பழக்கவழக்கங்களையும் கடைபிடிப்பான் ("ஊரோடு ஒத்து ஒத்து வாழ்வது")! ஆனால், தமிழ்நாட்டில் குடிவரும் மற்றவர்களிடம் அதை எதிர்பார்க்கமாட்டான்! மாறாக அவர்களை தலையில் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுவான் (வீட்டில் தெலுங்கில் மாட்லாடும் விஜயகாந்தில் ஆரம்பித்து, கடைகளில் "நிம்பள்க்கி நம்பள்" என்று பேசும் சேட்டு வரை).

சரியான ஒரு definition இல்லாததால், தமிழுக்கே தமிழ்நாட்டில் மரியாதை இல்லை! பிறகு எப்படி தமிழனுக்கு மரியாதை? தமிழ் நாட்டிலேயே கிடைக்காதது பிறகு வெளிமாநிலங்களில்/வெளிநாட்டில் எப்படி கிடைக்கும்!

2. சக தமிழனை நம்பாத ஒரு குணம்! ஊரில் செட்டியார் வைத்திருக்கும் அடகு கடைக்குப் போகாமல், ரெண்டு ஊர் தள்ளி கடை வைத்திருக்கும் "சேட்டை" நம்புவான்! அதே போல், ஒரு பொருளை விற்கும்போது, யாருக்கு கொடுத்தால் நல்லது என்று பாகுபாடு இல்லாமல் undeserving ஆசாமிகளுக்கு கொடுப்பான்! இதை பொருளில் ஆரம்பித்து, ஆட்சியை ஒப்படைப்பதுவரை கண்ணியம் தவறாமல் செய்வான்!

3. எதெற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவது! சாம்பாரில் காரம் கம்மியாக இருப்பதில் ஆரம்பித்து தன் தாயை சந்தேகப்படுத்திவிட்டான் என்பது வரை! அறிவுபூர்வமாக யோசிக்கிறேன் பேர்வழி என்று உணர்ச்சி பூர்வமாக ஏதாவது சொல்லிவிட்டோ அல்லது செய்துவிட்டோ about turn அடிப்பது
தமிழர்களுக்கு கை வந்த கலை! இந்த "உணர்ச்சிபூர்வ" விஷயத்தில் நம்பர் ஒன் "தமிழ் மொழி". அவன் வீட்டில் தமிழ் பேசுபவனாகவே இருக்க
மாட்டான்! ஆனால் "தமிளுக்கு ஆபத்து, தமிளுக்கு ஆபத்து" என்று எவனோ கூவுவான்! இந்த கூத்தில் பாதிக்கப்படுவது நிஜத்தமிழந்தான்!

4. தமிழை ஒழுங்காக பேசாத ஒரு "போங்கு" குணம்! படிக்காதவர்கள்தாம் இப்படியென்றால், படித்தவர்களும் இப்படித்தான்! கேட்டால்அது ஒரு "ஸ்டைல் மச்சி" என்ற ஒரு பதில்! தமிழ் பாட்டில் ஆங்கிலம் வந்தால் தவறு இல்லை (என்னைப்பொறுத்தவரை)! ஆனால் தமிழையே ஆங்கிலத்தனமான உச்சரிப்புதான் தேவை இல்லாத ஒன்று! இதெற்கெல்லாம் மூலாதாரம் A.S. திலீப் குமார் a.k.a."அல்லாஹ் ரக்கா ரஹமான்" தான் என்பேன்! அவர் படித்த பள்ளிக்கூடம் பத்மா சேஷாத்ரி! அங்கே படிக்கும் மாணவர்கள் பேசும் தமிழைத்தான் அவர் தன் பாடல்களில் உபயோகப்படுத்துகிறார்! ("சண்டே சர்ச்க்கு போவணும்! வோர்க் இருக்கு" போன்ற சொற்றொடர்கள் அங்கே பிரபலம்)! தன் மொழியையே உதாசீனப்படுத்தும் ஒருவனை மற்றவர்கள் உதாசீனப்படுத்துவதில் என்ன ஆச்சர்யம் வந்து விடப்போகிறது?

5. சுய தம்பட்டம்! அதிலும் ஒன்றை ஆயிரமாக சொல்லுவது தமிழர்களுக்கு கை வந்த கலை! "ஆயிரம் யானைகளை கொன்றால் பரணி"! அப்படியென்றால் சோழநாடு பூராவும் யானைகள் தான் உலாத்திக்கொண்டிருந்ததா? இந்த சொற்றொடருக்கு வேறொரு அர்த்தம் இருக்குமோ என்னவோ, என்னைப் பொருத்தவரை இது கதை கட்டுவதற்கு உபயோகப்படும் ஒரு வாக்கியம்! சாதாரண விஷயத்துக்கு ஊரையே கூட்டுவது முதற்கொண்டு ஆரம்பிக்கும் தம்பட்டம்!

(மேலும் வரும்!!!!!)

Monday, February 11, 2008

ஒரு கோடி ரூபாய் பரிசு! முந்துங்கள்! முந்துங்கள்!

இந்த வீடியோக்களை முதலில் பாருங்கள்! பார்த்து விட்டு கீழே படியுங்கள்!
உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது!

http://www.youtube.com/v/YJQD0zGZ_VI

http://www.youtube.com/v/w0iXYpHXWIA


பார்த்து விட்டீர்கள் அல்லவா? இப்போது விஷயத்துக்கு வருகிறேன்! இந்த பாடல்கள் இடம்பெற்ற படத்தை முழுசாக பார்த்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு!

பி.கு.: அப்படியே மெண்டல் ஆஸ்பத்திரிக்கும் ஃப்ரீயாக அட்மிஷன் தருகிறார்களாம், பார்க்க வாரீயளா?

Tuesday, February 5, 2008

கமலின் வைராக்கியம்!!!

என் மாமனார் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் நாடகத்தில் நடித்திருக்கிறார்! எண்பதுகளில் தூர்தர்ஷன் நாடகங்களிலும் நடித்திருக்கிறார்! இத்தனைக்கும் அவர் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் நல்ல ஒரு ஸ்டெனோ வேலையில் இருக்கும்போது பார்ட் டைமாக நடித்தது!

சுமார் 30-35 ஆண்டுகாலம் ஒரு துறையில் இருந்திருக்கிறாரென்றால் அனுபவத்திற்கு என்ன குறைச்சல் என்று நீங்கள் கேட்கலாம்! இல்லை நீங்கள் கேட்காவிட்டாலும் நான் விடுவதாக இல்லை! பின்னே? அவனவன் ஒரு வருஷமோ ஒன்றரை வருஷமோ ஜாவா கோவா என்று ஏதேதோ ஜல்லியடித்துவிட்டு அமெரிக்காவிற்கோ அல்லது பன்னாடை sorry பன்னாட்டு கம்பெனிக்கோ வேலைக்கு போகிறார்கள்! அப்படி போனவர்களே கும்மி அடிக்கும்போது நம்மாளுக்குஎன்ன குறைச்சல்?

ஓ.கே.! முதலில் அவர் கூட நடித்தவர்களைப் பற்றி கொஞ்சம்!

அறுபதுகளில் அவர் பல நாடகங்களில் நடித்திருந்தாலும், வி.எஸ். ராகவனின் ட்ரூப்பில்தான் நிறைய குப்பைகொட்டியிருக்கிறார்! (பல படங்களில் ஜட்ஜாக வந்து "சட்டத்த எப்படி கூண்டுல நிறுத்தமுடியும்? What are you talking?" என்று ஹீரோக்களைப் பார்த்து வசனம் பேசுவாரே, அவரேதான்!)

இவர் கூட நடித்தவர்களில் முக்கியமானவர் கமல்! அட, நம்ம கமல் ஹாசன் தான்! அப்போது கமலுக்கு 14-15 வயது இருக்கும்! வருஷம் 68-69 என்று வைத்துக்கொள்ளுங்களேன்! கமலுக்கு அப்படி என்ன நாடகத்தின்மேல் மோகமோ இல்லை நன்றாக படிக்கச்சொல்லி வற்புறுத்துவார்களோ என்று தெரியவில்லை! படிக்கக்கூட போகாமல் நித்தம் டிராமா டிராமா என்று அலைவானாம் ஸாரி அலைவாராம்!

கமல் என்ன என் மாமனார் மாதிரி சும்மாவா? அப்பா சேர்த்துவைத்த சொத்து! போதாக்குறைக்கு அண்ணன்கள் வேறு! குடும்பமே வக்கீல் குடும்பமாதலால் பயங்கர வசதி! தினமும் டிராமாவுக்கோ ரிஹர்சலுக்கோ காரில்தான் வருவாராம்! அதுவும் எப்படி? தன் அண்ணன்கள் யாராவது ஒருவர் தினமும் காரில்தான் கொண்டுவிடுவார்களாம்! Anyway, காரில் வந்தாலும் கமல் அலட்டமாட்டாராம்! ஏதாவது சிறு சிறு வேலைகள் செய்வாராம் சக நடிகர்களுக்கு!

பலமுறை கமலின் அண்ணன் சந்திரஹாசன் கமலை கொண்டுவிடும்போதெல்லாம் சக நடிகர்களிடம் - என் மாமனார் உட்பட -சொல்வாராம் "சார்! இவன் படிக்காம டிராமா டிராமான்னு அலையறான்! நீங்கதான் இவனுக்கு புத்திமதி சொல்லி படிக்க சொல்லணும். இல்லன்னா உருப்படாம போயிடப்போறான்".

அவர்களும் சொல்வார்களாம்! கமல் அதையெல்லாம் கேட்டுக்கொள்ளாமல் இருந்துவிடுவாராம்! ஒரு முறை என் மாமனார் ஏதோ இப்படி சொல்லப்போக, கமல் ஒரு response கொடுத்தாராம் "மாமா! நீங்களெல்லாம் என்ன ரொம்ப கிண்டல் பண்றீங்க! ஒரு நாள்இல்லை ஒரு நாள் நீங்க சொல்ற இந்த கமலஹாசன் 'ஆல் இண்டியா ஃபேமஸ் கமல் ஹாசன்' (ல்-இல்லில் ஒரு அழுத்தம்) ஆகப்போறேன் பாருங்க! அப்ப சொல்வீங்க".

பாருங்கள் கமலின் வைராக்கியத்தை!